பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக சாட்சி அளிக்கவுள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறவில்லை என்ற தில்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் மீது 18 வயதுக்கு உள்பட்ட ஒரு வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு அளித்தனர்.
இதுதொடா்பாக வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷண் சிங் மீது தில்லி காவல் துறை வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக சாட்சி அளிக்க உள்ள மல்யுத்த வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நேற்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக தில்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் தில்லி காவல்துறை இன்று விளக்கம் அளித்துள்ளது.
'மல்யுத்த வீராங்கனைகளுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை. அவர்கள் ஹரியாணாவில் இருப்பதால் ஹரியாணா காவல்துறையிடம் பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று முடிவு செய்தோம். தகவல் தொடர்பில் தவறுகள் இருந்தது. அது சரி செய்யப்பட்டுவிட்டது. தில்லி காவல்துறையின் பாதுகாப்பு தொடர்கிறது' என்று கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்கில் நேரில் ஆஜராக பிரிஜ் பூஷண் சிங், இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
இந்த வழக்கில் 18 வயத்துக்குள்பட்ட வீராங்கனையிடம் வாக்குமூலம் பெற்ற நிலையில் மற்ற வீராங்கனைகளிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.