மகாராஷ்டிரத்தில் நர்சரி பள்ளி பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு மகா விகாஸ் அகாடி கூட்டணியினர் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் பத்லாப்பூர் பகுதியில் நர்சரி பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. அந்த பள்ளியின் ஊழியர்கள், கழிவறையில் வைத்து பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் கொதித்தெழுந்த பெற்றோர்கள் இரு நாள்களுக்கு முன்பு பள்ளியை சூறையாடியதுடன் பத்லாப்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வழக்குப் பதிவு செய்யாத போலீசார் மீது சரமாரி கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
பெற்றோரின் போராட்டத்தையடுத்தே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக இதுதொடர்பான வழக்கில் முன்பை உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளன. இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
மும்பையில் சிவசேனை(யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் கொட்டும் மழையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரும் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதே நேரத்தில், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை(யுபிடி) இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி, இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குவதாகக் கூறி பாஜக மகிளா மோர்ச்சாவும் போராட்டம் நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.