பாஸ்போர்ட் சேவை இணையதளம் 3 நாள்கள் இயங்காது! மத்திய அரசு
ஆகஸ்ட் 29ஆம் தேதி மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களின் பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் மூன்று நாள்கள் இயங்காது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 29 (வியாழக்கிழமை) இரவு 8 மணிமுதல் செப்டம்பர் 2 (திங்கள்கிழமை) மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் ஆகஸ்ட் 30 (வெள்ளிக்கிழமை) வழக்கமாக நடைபெறும் ஆவண சரிபார்ப்பு நேர்க்காணல்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆவண சரிபார்ப்பு நேர்க்காணலுக்கு முன்பதிவு செய்திருந்த அனைவரும் நேரமுள்ள பிற நாள்களில் மாற்றி அமைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பிரதான அலுவலகம் உள்பட அனைத்து மண்டல அலுவலகங்களில் இயங்கும் பொது விசாரணை அரங்குகள் ஆகஸ்ட் 30 மட்டும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.