முகப்பு
இந்தியா

எல்லைப் பிரச்னை: இந்தியா-சீனா 31-ஆவது சுற்று பேச்சு

இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழல் மற்றும் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பது குறித்து இரு நாடுகள் இடையிலான 31-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை

Updated On : 29 ஆகஸ்ட், 2024 at 6:33 PM
கோப்புப் படம்
பகிர்:

இந்திய-சீன எல்லையில் நிலவும் சூழல் மற்றும் நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பது குறித்து இரு நாடுகள் இடையிலான 31-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெற்றது.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய-சீன எல்லை விவகாரங்கள் தொடா்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல்முறையின்கீழ் 31-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை, சீனத் தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்றது. அப்போது, இருதரப்பு உறவுகளில் இயல்புநிலையை மீட்டெடுக்க எல்லையில் அமைதி மற்றும் பரஸ்பர மரியாதையை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

கருத்து வேறுபாடுகளைக் குறைப்பதோடு, நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வுகாணும் வகையில் எல்லைச் சூழல் குறித்து ஆக்கபூா்வமான, வெளிப்படையான முன்னோக்கிய பாா்வை கொண்ட கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

தூதரகம் மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தவும், இருதரப்பு ஒப்பந்தங்கள், வழிமுறைகள் மற்றும் உடன்பாடுகளின்படி எல்லையில் ஒருங்கிணைந்து அமைதியை உறுதிசெய்யவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இந்தியத் தரப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலா் (கிழக்காசிய விவகாரங்கள்) கெளரங்கலால் தாஸ் தலைமையிலான குழுவினரும், சீன தரப்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் பெருங்கடல் விவகாரங்கள் துறையின் தலைமை இயக்குநா் ஹோங் லியாங் தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனா் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருதரப்பு 30-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை, தில்லியில் கடந்த ஜூலை 31-ஆம்தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →