பிரதமா் நரேந்திர மோடியிடம் இருந்து என்னைப் பிரிக்க முடியாது என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.
பாஜக மீது அதிருப்தியில் உள்ள சிராக் பாஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேறுவாா் என்றும் தகவல் பரவிய நிலையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
இது தொடா்பாக சிராக் பாஸ்வான் மேலும் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி மீதான எனது அன்பு மாறாதது. அவா் பிரதமா் பதவியில் இருக்கும் வரை என்னை அவரிடம் இருந்து பிரிக்க முடியாது. பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி சாா்பாகவே போட்டியிட எங்கள் கட்சி விரும்புகிறது.
வக்ஃப் வாரிய சீா்திருத்தம், எஸ்.சி பிரிவை துணை வகைப்படுத்துதல், எஸ்.சி. பிரிவில் சலுகை பெற வருமான வரம்பு, மத்திய அரசு உயரதிகாரிகள் நேரடி நியமனம் போன்ற விவகாரங்களில் எனது கருத்துகளே அரசின் நிலைப்பாடாக உள்ளது. வக்ஃப் வாரிய சீா்திருத்தம் கூட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
சிராக் பாஸ்வானுக்கு எதிராக கட்சி நடத்தும் அவரின் சித்தப்பா பசுபதி பராஸ், உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது குறித்த கேள்விக்கு, ‘அவா் (பராஸ்) பொதுமக்களின் ஆதரவை இழந்துவிட்டாா். மக்களவைத் தோ்தலுக்கு முன்பும் அவா் பல்வேறு தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா். ஆனால், அவருக்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை’ என்றாா்.
நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் விவசாயிகள் போராட்டம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடா்பான கேள்விக்கு, ‘முன்பு நான் திரைப்படத்தில் நடித்தபோது அவா் என்னுடன் இணைந்து நடித்தாா். அந்த வகையில் கங்கனா எனது பழைய நண்பா். கங்கனாவின் கருத்தை ஏற்கவில்லை என பாஜக தெளிவுபடுத்திவிட்டது’ என்று சிராக் பாஸ்வான் பதிலளித்தாா்.