இவிஎம் அலைநீளத்தில் மாற்றம் செய்ய முடியும்? சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட நபர் மீது வழக்கு!
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த தவறான தகவல்களை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்(இவிஎம்) குறித்த தவறான தகவல்களை பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை பாயும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாகவும், இத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து பல்வேறு புகாா்கள் எழுந்துள்ள நிலையில், இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் வாக்குப்பதிவு இயந்திர முறைகேடுகள் குறித்த தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு தனிநபர் ஒருவர் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.
அதில், இவிஎம்-களை அவற்றின் அலைநீளத்தில் மாற்றங்களைச் செய்து நமது வசதிக்கேற்றாற்போல் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த காணொலி அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், மேற்குறிப்பிட்ட விடியோவில் அடிப்படை ஆதாரமற்ற பொய்யான தகவல்களைப் பதவிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர் மீது மும்பையின் தக்ஷின் பகுதியிலுள்ள சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையரிடமிருந்து பெறப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது மும்பை இணையவழி(சைபர் குற்றம்) குற்றப் பிரிவு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
“இத்தகைய தவறான செயல்களில் ஈடுபடுவது கடுமையானதொரு குற்றச்செயலாகும். இவ்வாறு குற்றசெயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை பாயும்” என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.