புஷ்பா 2: நெரிசலில் சிக்கி பெண் பலி; அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!
புஷ்பா-2 படம் பார்க்கவந்த பெண் நெரிசலில் சிக்கி பலியான நிலையில் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக பலியானார். இதனால், அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 4 ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் பரிதாபமாக பலியானார்.
நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் இன்று(டிச.5) காலை வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற போது தில்சுக்நகரைச் சேர்ந்த 35 வயதான ரேவதி என்ற பெண் பலியான நிலையில், அவரது 13 வயது மகன் படுகாயமடைந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அல்லு அர்ஜூனை தவிர்த்து, அதிகளவிலான கூட்டத்தை ஹைதராபாத் சந்தியா தியேட்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத் காவல்துறையினர் கூறுகையில், “தியேட்டருக்கு வரப்போவதாக தியேட்டர் நிர்வாகம் அல்லது நடிகர்கள் குழு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் வருவதை தியேட்டர் நிர்வாகம் அறிந்திருந்தும், அவர்களுக்கென்று தனி வழியோ, வெளியேற வழியோ இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவரின் குடும்பத்தினர் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 105,118(1), 3(5) பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரையரங்கிற்குள் மரணம் மற்றும் பிறருக்கு காயம் ஏற்படுத்தும் குழப்பமான சூழ்நிலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹைதராபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.