தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் நியமனம்!
தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் நியமனம்.
தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று (டிச. 23) உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற டி.ஒய்.சந்திரசூட், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவராக பொறுப்பேற்பார் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹிமாசலப் பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் ராமசுப்பிரமணியன் பணியாற்றியுள்ளார்.
Advertisement
முன்னதாக சென்னை மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
நீதிபதி ராமசுப்பிரமணியன் யார்?
தமிழ்நாட்டில் உள்ள மன்னார்குடியில் பிறந்த ராமசுப்பிரமணியன், இந்து உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர். விவேகானந்தா கல்லுாரியில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர்; சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1983-ல் பட்டம் பெற்றவர்.
2006 முதல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2009 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
2016 முதல் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி அனுபவம் கொண்ட இவர், 2019 ஜூன் முதல் ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் இருந்துள்ளார். 2019 செப்டம்பர் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தவர்.