சாலைப் பாதுகாப்புக்கு ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஃபட்னவீஸ் அறிவுறுத்தல்!
ஏஐ தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க போக்குவரத்துத் துறையினருக்கு மகாராஷ்டிர முதல்வர் அறிவுறுத்தல்.
சாலை விபத்துகளைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்குமாறு மாநில போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிர அரசு கூகுள் நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்குமாறு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
சாலை, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் அடுத்த 100 நாள்களுக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த ஃபட்னவீஸ் 15 ஆண்டுகள் பழமையான பொது மற்றும் தனியார் வாகனங்களை அழிக்க (ஸ்கிராப்) உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் 13,000-க்கும் மேற்பட்ட காலாவதியான அரசு வாகனங்கள் அகற்றப்பட்டு, 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் செயல்திறனை மேம்படுத்த எல்என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மற்றும் சிஎன்ஜி எரிவாயு பயன்பாட்டுக்கு உகந்ததாக மாற்றியமைக்கப்படும்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வெளியிடப்பட இருக்கும் மாநிலத்தின் மின்சார வாகனங்களுக்கான கொள்கைகளையும் திட்டங்களையும் முதல்வர் ஃபட்னவீஸ் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
நகர்ப்புறங்களில் போக்குவரத்து வசதியை பைக் டாக்ஸி மற்றும் கேப் சேவைகளை அறிமுகப்படுத்த போக்குவரத்துத் துறைக்கு ஃபட்னாவிஸ் அறிவுறுத்தினார்.
மேலும், பேருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போக்குவரத்து நடைமுறைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.