புது தில்லி: மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திரம் மாநில பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரம் முன்னாள் முதல்வருமான என். சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆந்திரம் மாநிலத்திற்கு மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு வரும் மக்களவை மற்றும் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான சந்திப்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் 28 ஆம் தேதி பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த ஜனதா தளம் தலைவரும், பிகாா் முதல்வருமான நிதிஷ் குமாா், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மாலை பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்றார்.
அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு மீண்டும் வந்தால், நிதிஷ் குமாருக்கு பின்னர் எதிர்க்கட்சிகளுடனான உறவை முறித்துக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் இரண்டாவது பெரிய மாநில கட்சித் தலைவர் ஆவார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கைகோர்க்க ஆர்வமாக இருப்பதாகவும், நாயுடு உடனான கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிக்கு மேலும் உதவும் என்று ஆளும் கட்சியில் உள்ள ஒரு பிரிவினர் நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பாஜக மட்டும் குறைந்தபட்சம் 370 தொகுதிகளில் வெற்றி பெறும். மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும். அதற்கு அதிகபட்சம் 100 முதல் 125 நாள்கள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பாஜக கூட்டணியில் இருந்த நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி, தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணியில் இணைவதற்கு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
கடந்த 4 ஆம் தேதி சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்துப் பேசினார்.
2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய நாயுடு, 2019 தேர்தலில் மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது.