ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, கடந்த 2001 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி விவகாரத்தில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2022ல் இந்த வழக்கில் அப்துல்லா மீது மத்திய ஏஜென்சி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில், 86 வயதான பரூக் அப்துல்லா மீது பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த மாதம் 11-ஆம் தேதியன்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தனது உடல்நிலையைக் காரனம் காட்டி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனைத் தொடர்ந்து, நேற்று(பிப்.12) புதிதாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர் இன்று(பிப்.13) அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளை சேர்ர்ந்த முக்கியத் தலைவர்கள் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை தொடர்ந்து. தற்போது ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள பரூக் அப்துல்லாவும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.