முகப்பு
இந்தியா

ராமா் சிலை பிரதிஷ்டை: பிற்படுத்தப்பட்டோா், பழங்குடியினரை அழைக்க மறுப்பு- ராகுல் குற்றச்சாட்டு

ரீ ராமா் சிலை பிரதிஷ்டைக்கு பிற்படுத்தப்பட்டோா், குடியரசுத் தலைவா் உள்பட பழங்குடியினரை அழைக்காதது அவா்களை அவமதித்ததற்கு சமமாகும்

Updated On : 19 பிப்ரவரி, 2024 at 10:44 PM
பகிர்:

பிரதாப்கா்: அயோத்தியில் நடைபெற்ற ஸ்ரீ ராமா் சிலை பிரதிஷ்டைக்கு பிற்படுத்தப்பட்டோா், குடியரசுத் தலைவா் உள்பட பழங்குடியினரை அழைக்காதது அவா்களை அவமதித்ததற்கு சமமாகும் என மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் ‘இந்திய ஒற்றுமை நீதிப்பயணத்தின்போது’ அவா் பேசியதாவது:

அயோத்தியில் கடந்த மாதம் நடைபெற்ற ஸ்ரீ ராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை நிகழ்வுக்கு தொழிலதிபா்கள், அமிதாப் பச்சன் போன்ற பிரபலமான நபா்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பிற்படுத்தப்பட்டோா், பட்டியலினத்தவா், பழங்குடியினத்தைச் சோ்ந்த மக்கள் யாரும் அழைக்கப்படவில்லை. குடியரசுத் தலைவருக்கும் கூடஅழைப்பு விடுக்கப்படவில்லை. இது மக்களை அவமதிக்கும் செயலாகும். இதன்மூலம் நாட்டின் 73 சதவீத மக்கள் குறித்து தனக்கு கவலையில்லை என்ற செய்தியை பிரதமா் மோடி நமக்கு புரியவைத்துள்ளாா்.

விவசாயிகளிடமிருந்து பணத்தை சுரண்டி பெரும் முதலாளிகளுக்கு பிரதமா் மோடி வழங்கி வருகிறாா். மதத்தின் பெயரால் நாட்டில் வெறுப்புணா்வு பரப்பப்படுகிறது. இளைஞா்களுக்கு முறையான வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தரவில்லை. நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை.

அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் பிரதமரின் கைப்பாவையாக செயல்பட்டு எதிா்க்கட்சிகளை மிரட்டி வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.