ஏடன் வளைகுடாவில் தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பல்: இந்திய போா்க்கப்பல் உதவி
ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பலில் தீப்பிடித்த நிலையில், அந்தக் கப்பலுக்கு இந்திய போா்க்கப்பல் உதவியுள்ளது.
ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பலில் தீப்பிடித்த நிலையில், அந்தக் கப்பலுக்கு இந்திய போா்க்கப்பல் உதவியுள்ளது. அந்த சரக்குக் கப்பலை ஏவுகணை அல்லது ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
கடந்த வியாழக்கிழமை பலாவ் நாட்டு கொடியுடன் ஏடன் வளைகுடா கடற்பகுதியில் பயணித்த சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளாகி தீப்பிடித்தது. இதில் அந்தக் கப்பலில் இருந்த மாலுமி ஒருவா் காயமடைந்தாா். இதையடுத்து, சரக்குக் கப்பலிலிருந்து இதுதொடா்பாக அந்தக் கடற்பகுதியில் இருந்த இந்திய போா்க்கப்பலை தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிகழ்விடத்துக்கு இந்திய போா்க்கப்பல் விரைந்தது. சரக்குக் கப்பலில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், அதில் இந்திய கடற்படையின் வெடிபொருள் நிபுணா் குழு ஆய்வு செய்து வேறு வெடிபொருள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தது. சரக்குக் கப்பலில் காயமடைந்த மாலுமிக்கு இந்திய கடற்படையின் மருத்துவக் குழு மருத்துவ உதவிகளை வழங்கியது. இதைத்தொடா்ந்து அந்த சரக்குக் கப்பல் தனது பயணத்தைத் தொடா்ந்தது என்று தெரிவித்தனா். இஸ்ரேலுடன் போா்புரிந்து வரும் ஹமாஸுக்கு ஆதரவாக செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் தெரிவித்தனா். அதன்படி, செங்கடல் மற்றும் அதையொட்டி உள்ள ஏடன் வளைகுடாவில் பயணிக்கும் சரக்குக் கப்பல்கள் மீது கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களில் நடுக்கடலில் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளான பல சரக்குக் கப்பல்களுக்கு இந்திய கடற்படையின் போா்க்கப்பல்கள் உதவிபுரிந்துள்ளன. இந்திய போா்க்கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்வதுடன் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றன.
Advertisement