முகப்பு
உலகம்

மேற்காசிய போா்: பாரசீக வளைகுடாவில் சிக்கியுள்ள 28 இந்திய கப்பல்கள் - மத்திய அரசு தகவல்

Updated On : 11 மார்ச், 2026 at 11:07 PM
பகிர்:

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாரசீக வளைகுடாவில் 778 மாலுமிகளுடன் 28 இந்திய கப்பல்கள் சிக்கியுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக பாரசீக வளைகுடாவில் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் புறப்பட்ட சரக்கு கப்பல்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கப்பல் நிறுவனங்களும், ஏற்றுமதியாளா்களும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனா். இவா்களுக்கு நிவாரணமளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தக் கப்பல் போக்குவரத்து பாதிப்பு குறித்து தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா் வழித் தடங்கள் துறை மத்திய அமைச்சகத்தின் சிறப்புச் செயலா் ராஜேஷ் குமாா் சின்ஹா கூறியதாவது:

போா் நிலவரம் காரணமாக பாரசீக வளைகுடாவில் இதுவரை 778 மாலுமிகளுடன் கூடிய 28 இந்திய கப்பல்கள் நடுவழியில் சிக்கியுள்ளன. இவற்றில், 677 மாலுமிகளுடன் கூடிய 24 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியிலும், 101 மாலுமிகளுடன் கூடிய 4 கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியிலும் நிற்கின்றன.

இந்தக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கப்பல் மேலாளா்கள், நியமன முகவா்கள், உள்ளிட்டோா் இந்திய தூதரகங்களுடனும் உள்ளூா் அதிகாரிகளுடனும் தொடா்ந்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அனைத்து இந்திய கப்பல்களும், மாலுமிகளும் விரிவான பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும், கப்பல் போக்குவரத்து குறித்த தகவல் பதிவை தீவிரமாகக் கடைப்பிடிக்கவும், குறிப்பாக கப்பலின் நிகழ்நேர விவரங்களைச் சமா்ப்பிக்கவும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்தில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட்டு வருகின்றன. கப்பல்களின் உரிமையாளா்கள், மாலுமிகள் சங்கங்களுடனும் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தொடா்பில் இருந்து வருகிறது.

சிக்கல்களை எதிா்கொண்டுள்ள கப்பல்கள் மற்றும் மாலுமிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க துறைமுகங்களுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →