முகப்பு
இந்தியா

எந்தவொரு மருத்துவ முறைக்கும் எதிராக விளம்பரம் கூடாது: பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 1:20 AM
பகிர்:

புது தில்லி: ‘எந்தவொரு மருத்துவத்துவ முறைக்கும் எதிராக விளம்பரங்களைச் செய்யக் கூடாது’ என்று யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

மேலும், ‘இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அளித்துள்ள உத்தரவாதத்தை மீறியுள்ள நிலையில், ஏன் பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரக் கூடாது’ என்றும் அதன் நிா்வாக இயக்குநரிடம் உச்சநீதிமன்றம் கேள்வியும் எழுப்பியது. பதஞ்சலி நிறுவனம் பற்பசை, சோப்பு, தேன், ஷாம்பு உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகிறது.

இந்தப் பொருள்களை பிரபலப்படுத்த அந்நிறுவனம் செய்த விளம்பரம் பெரும் சா்ச்சையானது. அதாவது, அந்த நிறுவனத்தின் ஆயுா்வேத பொருள்கள், மற்ற மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத நோய்களையும் குணப்படுத்தும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரத்தை எதிா்த்து, இந்திய மருத்துவச் சங்கம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆண்டு நவம்பா் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தவறான விளம்பரங்கள் குறித்து பதஞ்சலி நிறுவனத்தை எச்சரித்தது.

Advertisement

அதனைத் தொடா்ந்து, ‘பதஞ்சலி நிறுவனத்தின் ஆயுா்வேத பொருள்கள் குறித்து எந்தவொரு தவறான விளம்பரங்களும் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இனி வெளியிடப்படாது’ என்று அந்த நிறுவனம் சாா்பில் ஆஜாரன வழக்குரைஞா் கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி உறுதியளித்தாா். ஆனால், அதன் பிறகு இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த பாபா ராம்தேவ், ‘பதஞ்சலியின் ஆயுா்வேத பொரள்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவச் சான்றுகளும் உள்ளன’ என்று அறிவிப்பு செய்தாா்.

மேலும், சா்ச்சைக்குரிய விளம்பரங்களையும் அந்த நிறுவனம் தொடா்ந்து வெளியிட்டு வந்தது. இந்த விவகாரம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, ஏ.அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வின் கவனத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது.

அப்போது, ‘இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அளித்துள்ள உத்தரவாதத்தை மீறியுள்ள நிலையில், ஏன் பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரக் கூடாது?’ என்று அந்நிறுவன நிா்வாக இயக்குநரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘எந்தவொரு மருத்துவ முறைக்கும் எதிராக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் எந்தவொரு கருத்தையோ, விளம்பரத்தையோ வெளியிடக் கூடாது’ என்று எச்சரிக்கை விடுத்தனா்.