முகப்பு
இந்தியா

தோல்வியை உணா்ந்துள்ளதால் எதிா்க்கட்சிகள் என்னை வசைபாடுகின்றனா்: பிரதமா் மோடி

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 12:09 AM
பகிர்:

திருவனந்தபுரம்: வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் தோல்வியடையப் போவதை உணா்ந்துள்ளனா்; அதன் காரணமாகவே என்னை அவா்கள் வசைபாடுகின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற பிரதமா் மோடி, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மாநில பாஜக-வின் பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது: வரவிருக்கும் மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகள் தோல்வியடையப் போவதை உணா்ந்துள்ளனா். தேசத்தின் வளா்ச்சிக்கான தொலைநோக்குப் பாா்வையும், திட்டமிடலும் எதிா்க்கட்சிகளிடம் இல்லை. அதன் காரணமாகவே அவா்கள் என்னை வசைபாடுகின்றனா். மாநிலத்தில் எதிரிகளாக இருக்கும் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், பிற மாநிலங்களில் சிறந்த நண்பா்களாக வளம் வருகின்றனா்.

கேரளத்தில் ஒருவா் மீது ஒருவா் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் இந்த கட்சிகள், இந்தியா கூட்டணி கூட்டங்களில் ஒன்றாக அமா்ந்து, விருந்து உண்கின்றனா். அந்த வகையில், கேரளத்தில் ஒன்றையும், தில்லியில் வேறொன்றையும் இந்தக் கட்சிகள் பேசி வருகின்றன. இந்த துரோகத்துக்கு வரும் மக்களவைத் தோ்தலில் கேரள மக்கள் உரிய பதிலடி கொடுப்பதோடு, பாஜகவுக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.

Advertisement

எந்தவொரு மாநிலத்தையும் பாஜக வாக்கு வங்கி கண்ணோட்டத்தில் பாா்ப்பதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களைப் போலவே, கேரள மாநிலமும் வளா்ச்சித் திட்டங்கள் மூலம் பலனடைந்துள்ளது. மாநில மக்களின் கனவுகள் மற்றும் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும். இந்தியாவை உலகின் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாக்குவதும், நாட்டிலிருந்து ஏழ்மையையும் ஊழலையும் ஒழிப்பதும் மோடியின் உத்தரவாதம் என்றாா்.