ஜார்க்கண்ட்: கிணற்றில் விழுந்த யானை 40 மணிநேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்பு
ஜார்க்கண்டில் கிணற்றில் விழுந்த யானை 40 மணிநேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
ஜார்க்கண்டில் கிணற்றில் விழுந்த யானை 40 மணிநேரத்திற்கு பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலம், செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தில் கூட்டத்துடன் கடந்து சென்ற யானைகளில் ஒன்று புதன்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள 25 முதல் 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இரண்டு மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு சற்று தொலைவில் இருந்து சாய்வுதளமாக குழி தோண்டினர். பின்னர் கிராம மக்களின் உதவியுடன், கயிறு மூலம் யானையை சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக யானையை காப்பாற்ற முடியவில்லை என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்த யானையின் வயது 25 முதல் 30ஆக இருக்கலாம் என்றும் யானை இறந்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறிய சனிக்கிழமை உடற்கூராய்வு நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த கிணறு பாசனத்திற்காக தோண்டப்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
வனத்துறையினர், உரிய நேரத்தில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்காததே யானை இறப்பிற்கு காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.