சக போட்டி நிறுவனங்களில் இருந்து ஐடி ஊழியர்களைக் கவர்ந்திழுப்பதாக காக்னிசன்ட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டைக் குறித்து பேசியுள்ளார் அந்த நிறுவனத்தின் தலைவரும் தலைமை இயக்குநருமான ராஜேஷ் நம்பியார்.
அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள நம்பியார் அது குறித்து வேறு எதுவும் தெரிவிக்கவில்லை.
அப்படி குற்றம் சாட்டும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடனான ஒப்பந்தத்தைச் செயல்படுத்த விரும்பினால் அது அவர்களின் சிறப்புரிமை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்துறையளவில் சக நிறுவனங்களிலிருந்து ஊழியர்களைப் பணியமர்த்துவது குறித்து எந்தவித விதிமுறைகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். திறமை மிக்கவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதன் மூலமாகவே இந்தத் துறை வளர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஐடி நிறுவங்களிடையே பனிப்போர் தொடர்ந்துவருகிறது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இன்போசிஸ், பணியாளர்களைக் கவர்ந்திழுக்க முறையற்ற தந்திரங்களை காக்னிசன்ட் பின்பற்றுவதாக குற்றம் சாட்டியது.
இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் கருவறை தங்கக் கதவுகள்!
முன்னர் இன்போசிஸில் இருந்து தற்போது காக்னிசன்ட் சிஇஓவாக பணியாற்றும் ரவி குமார், இன்போசிஸின் 20 மூத்த பணியாளர்களையும் மற்றும் சிலரையும் காக்னிசன்டில் பணியமர்த்தியதாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.