சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு இஸ்லாமியக் குடும்பம் அன்னதானம் வழங்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் கர்நாடகத்தின் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிஞ்சாரா சமூகத்தின் மாவட்டத் தலைவரான காஷிம் அலி முடபல்லி. வடக்கு கர்நாடகத்தில் கொப்பல் நகரின் ஜெயநகர் பகுதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் சபரிமலை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மேலும், ஐயப்ப பக்தர்கள் பஜனைகள் பாடி அவரது வீட்டில் வழிபாடு செய்தனர். காஷிம் குடும்பத்தினரும் நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களுடன் இணைந்து பஜனைகள் மற்றும் வழிபாடுகளில் பங்கேற்றனர்.
அனைத்து மதங்களும் ஒன்றுதான், எல்லா மதங்களின் சாரத்தையும் ஒருவர் அறிந்துகொள்ள வேண்டும் என்று காஷிம் கூறினார்.
சமீபத்தில் சபரிமலை கோயிலுக்குச் சென்ற வட கர்நாடகாவைச் சேர்ந்த 6 பக்தர்கள், வனவிலங்கு தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். பின்னர் குடகு மாவட்டத்தில் உள்ள மசூதியில் தங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளும் இஸ்லாமியர்கள் செய்து கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.