முகப்பு
இந்தியா

பாஜக தேர்தல் நேரத்தில் பழங்குடியினரை ஏமாற்ற முயற்சிக்கிறது: கார்கே குற்றச்சாட்டு!

பத்தாண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நேரத்தில் பழங்குடியின மக்கள் பாஜகவின் நினைவுக்கு வந்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)
பகிர்:

பத்தாண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நெருங்கும் நேரத்தில் பழங்குடியின மக்கள் பாஜகவின் நினைவுக்கு வந்துள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, “பத்தாண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நேரத்தில் பழங்குடியின மக்கள் பாஜகவின் நினைவுக்கு வந்துள்ளனர். நாம் பாஜகவிடம் மூன்று கேள்விகள் கேட்கவேண்டும்.

முதலாவது, 2013-ஆம் ஆண்டை ஒப்பிட பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறைகள் 48.15 சதவீதம் அதிகரித்துள்ளது ஏன்?

வன உரிமைச் சட்டம் 2006-ஐ அமல்படுத்துவதில் பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் தோல்வியடைந்தது ஏன்?

இன்று (ஜன.15) மோடி அறிவித்திருக்கும் திட்டத்திற்கு முன்புவரை, பழங்குடியின நலத்துறை அமைச்சகத்தால் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் தொகை தொடர்ந்து குறைந்து வந்தது ஏன்?

பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக செலவிடப்படும் தொகை 2018-19ஆம் ஆண்டில் ரூ.250 கோடியில் இருந்தது. அது 2022-23ஆம் ஆண்டில் 6.48 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

ஆனால் மோடி அரசாங்கம் தேர்தல் நேரத்தில் பழைய திட்டங்களுக்கு பெயரை மாற்றி அறிமுகப்படுத்துவதன் மூலம், பழங்குடியின மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது.

நீர், நிலம், வனம் மற்றும் பழங்குடியின கலாச்சாரத்தைக் காப்பது நமது கடமையாகும். பழங்குடியின சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போரிடும்.” என்று கார்கே தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.