புவனேஸ்வரம் : ஒடிசாவில் 50 மாணவர்களுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்த பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதியதில், பேருந்தில் பயணம் செய்த மாணவிகளில் 2 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், ஒரு மாணவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் 13 மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணித்த மாணவர்கள் அனைவரும் தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் குடியரசு தின விடுமுறையைக் கொண்டாடுவதற்காக போலங்கிர் பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தபோது, சஹலபங்கா வனப்பகுதி அருகே நேற்றிரவு(ஜன.26) இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.