முகப்பு
இந்தியா

பிகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதீஷ் குமார்!

பிகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:12 PM
முதல்வராகப் பதவியேற்ற நிதீஷ் குமார்
பகிர்:

பிகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார்.

காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவற்றுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார், திடீரென அதில் இருந்து விலகி, மீண்டும் பாஜக உடன் கைகோர்த்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமார், அதைத் தொடர்ந்து பிகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து, பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார். 

இந்நிலையில் இன்று (ஜன.28) மாலையில் பிகார் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌதரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகிய இருவரும் துணை முதல்வராகப் பதவியேற்றனர்.

நிதீஷ் குமாரைத் தொடர்ந்து 8 பேர் மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்தப் பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.