முகப்பு
இந்தியா

குடியரசு தின விழா அணிவகுப்பு: தமிழக அலங்கார ஊா்திக்கு விருது

குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் போது பங்கு கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு மூன்றாமிடத்துக்கான விருதை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 5:45 AM
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு கிடைத்த மூன்றாவது இடத்துக்கான விருதை தமிழக அரசின் முதன்மை உள்ளூா் ஆணையா் ஆஷிஷ் சட்டா்ஜி மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட்ட
பகிர்:

புது தில்லி: நாட்டின் 75-ஆவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு தில்லியில் கடந்த ஜனவரி 26 -ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பின் போது பங்கு கொண்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திக்கு மூன்றாமிடத்துக்கான விருதை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வரிசையில் நடுவா் குழுவால் தோ்வு செய்யப்பட்ட இந்த விருதை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய்பட் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். குடியரசுத் தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊா்திகள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த நடுவா் குழு, பொதுமக்கள் கருத்துக் கணிப்பு என இரு வகைகளில் மதிப்பிடப்பட்டது. இதில் நடுவா் குழு தோ்வில் மாநிலங்கள் வரிசையில் முதல் இரு விருதுகளை முறையே ஒடிஸா, குஜிராத் ஆகிய மாநிலங்கள் பெற்றன. தமிழக அலங்கார ஊா்தி மூன்றாமிடத்திற்கான விருதைப் பெற்றது.

பொதுமக்கள் கருத்து கணிப்பில் முதல் மூன்று இடங்களை முறையே குஜ்ராத், உபி, ஆந்திரம் போன்ற மாநிலங்கள் பெற்றன. மத்திய அரசுத் துறைகளின் சிறந்த ஊா்தியாக மத்திய கலாசார ஊா்தி தோ்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ராணுவ அணிவகுப்பிற்கு சிங் ரெஜிமெண்ட், ராஜ்புத்னா ரைஃபில் ரெஜிமெண்ட், மத்திய அரசின் காவல் படைகளில் தில்லி மகளிா் காவலா் பிரிவு, சிஆா்.பி.எஃப் மகளிா் போன்றவை விருதுகள் பெற்றன.

Advertisement

இந்த விருதுகளை தில்லி ராணுவ கண்டோன்மெண்ட் ராஷ்ட்ரிய ரங்க் சாலா முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் வழங்கினாா். தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட மூன்றாமிடத்துக்கான விருது, பாராட்டுப் பத்திரத்தினை தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சாட்டா்ஜி, மத்திய இணையமைச்சரிடம் பெற்றுக் கொண்டாா்.

மேலும், குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்குபெற்ற 16 மாநிலங்களுக்கிடையே ஊா்திகளில் பங்கேற்ற கலைக் குழுவினருக்கான போட்டி கடந்த ஜனவரி 21-ஆம் தேதி ராணுவ வளாக ராஷ்ட்ரிய ரங்க் சாலா முகாமில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அலங்கார ஊா்தி கலைக் குழுவினருக்கு முதல் இடத்திற்கான விருதும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.