நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் இருவரை சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூலை 9) கைது செய்தனர்.
பிகாரின் நாளந்தா பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் மற்றும் கயாவில் இருந்து சன்னி ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதில் சன்னி குமார் என்பவர் போட்டித் தேர்வாளர். ரஞ்சித் குமார் என்பவர் சன்னி குமாரின் தந்தையாவார்.
இதன்மூலம் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு ஹசாரியாக் நகரில் உள்ள ஒயாசிஸ் பள்ளி முதல்வர் எசான்உல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக பிகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.
ஜார்க்கண்ட், குஜராத், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றன. இதுதொடர்பாக அந்தந்த மாநில காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக பிகாரில் 2 முக்கிய குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.