இத்தாலியில் ரூ.10 லட்சத்தை இழந்த இந்தியப் பிரபலம்!
இத்தாலி பிரதமர் மெலோனியிடம் புகார் அளித்த திவ்யங்கா திரிபாதி
இத்தாலி சென்ற திவ்யங்கா திரிபாதியின் உடைமைகள் திருடப்பட்டதால், அந்நாட்டு பிரதமர் மெலோனியிடம் முறையிட்டுள்ளார்.
இந்தியத் தொலைக்காட்சிப் பிரபலமான திவ்யங்கா திரிபாதியும், அவருடைய கணவரும் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது, ஃப்ளோரன்ஸ் நகரத்தில் அவர்களுடைய உடைமைகள் திருடப்பட்டதாக, திவ்யங்கா நேற்று (ஜூலை 11) தெரிவித்திருந்தார். அதாவது, பாஸ்போர்ட், ரூ.10 லட்சம் உள்பட சில பொருள்களும் திருடு போயுள்ளன.
இதனைத் தொடர்ந்து, திவ்யங்கா கவனக்குறைவாக இருந்ததாகவும், கவனமாக இருக்க வேண்டுமென்றும் சிலர் அறிவுரை கூறியிருந்தனர். சிலர் பண உதவி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக திவ்யங்கா தெரிவித்ததாவது, ``எங்களுடைய கார் ஒரு பாதுகாப்பான விடுதியில் தான் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், உதவி செய்ய முடிந்தால் உதவுங்கள்; இல்லையெனில், உங்கள் வேலையைப் பாருங்கள். பண உதவி செய்ய முற்பட்ட அனைவருக்கும் நன்றி. ஆனால், எங்களிடம் போதுமான பணம் இருப்பதால், தற்போது தேவையில்லை” என்று கூறி பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனியைக் குறிப்பிட்டு ``இங்கு கொள்ளை சம்பவங்கள் மிகவும் சாதாரணமாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தால் எங்களுடைய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் இழந்து விட்டோம். இனிமேல், இத்தாலிக்கு எவ்வாறு வருவோம்?’’ என்றும் கூறியுள்ளார்.