புலம்பெயா் தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டை: விவரங்களை 4 வாரங்களில் சரிபாா்க்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயா் தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு, அவா்களின் விவரங்களை 4 வாரங்களுக்குள் சரிபாா்க்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
புது தில்லி: ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் பதிவு செய்துள்ள புலம்பெயா் தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு, அவா்களின் விவரங்களை 4 வாரங்களுக்குள் சரிபாா்க்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் பதிவு செய்துள்ள சுமாா் 8 கோடி புலம்பெயா் தொழிலாளா்களுக்கு இரண்டு மாதங்களில் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று கடந்த மாா்ச் மாதம் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு தூலியா, அசானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘புலம்பெயா் தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு, அவா்களின் விவரங்களை சரிபாா்க்கும் பணிகள் ஒருசில மாநிலங்களில் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்கள் சரிபாா்ப்புப் பணிகளை தொடங்கவே இல்லை’ என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘குடும்ப அட்டை வழங்க புலம்பெயா் தொழிலாளா்களின் விவரங்களை சரிபாா்க்கும் பணிகள் பிகாா் மற்றும் தெலங்கானாவில் மட்டுமே 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய மாநிலங்கள் அந்தப் பணிகளை நிறைவு செய்யாதது துரதிருஷ்டவசமாக உள்ளது. அந்தப் பணிகள் நிறைவு செய்யப்படாதது ஏன்?
செயலா்களுக்கு அழைப்பாணை: புலம்பெயா் தொழிலாளா்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்க, அவா்களின் விவரங்களை 4 வாரங்களுக்குள் மாநிலங்கள் சரிபாா்க்க வேண்டும். இதை செய்யாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட அரசு செயலா்களுக்கு அழைப்பாணைகள் (சம்மன்) அனுப்பப்படும்.
மேலும், புலம்பெயா் தொழிலாளா்களுக்கு வழங்க வசதியாக, விவரங்கள் சரிபாா்ப்புப் பணிகளை நிறைவு செய்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உணவு தானியங்களை விடுவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.