மகாராஷ்டிரத்தில் பாஜக மீண்டும் வலுப்பெற வேண்டும்: அமித் ஷா
புணேவில் பாஜக மாநில மாநாடு இன்று (ஜூலை 21) நடைபெற்றது.
மகாராஷ்டிரத்தில் பாஜக மீண்டும் வலுப்பெற வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பாஜக மாநில மாநாடு இன்று (ஜூலை 21) நடைபெற்றது. பாஜக மூத்த தலைவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பாஜக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிக்கு கருணை காட்டியவர் உத்தவ் தாக்கரே. மாநிலத்தில் ஊழலை நிறுவனமயமாக்கிவிட்டவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.
நமக்கு நாமே புதிய இலக்குகளை நிர்ணயித்து அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் பாஜக மீண்டும் வலுப்பெற வேண்டும்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய மக்கள் தங்களின் ஆதரவை அளித்துளனர். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பாஜக தொண்டரும் கட்சியின் வெற்றிக்காக உழைத்துள்ளனர்.
பாஜக தலைமையிலான கூட்டணி, 2019 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பெற்றதை விட இம்முறை நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சிறப்பான இடத்தைப் பெற கூடுதலாக உழைக்கும்.
மகாராஷ்டிரத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் (பாஜக) வெற்றி பெற்ற பிறகு ராகுல் காந்தியின் ஆணவம் தகர்ந்துவிடும்.
சுயாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் அடைவேன் என்ற வாசகத்தை அளித்த பால கங்காதர திலகர் பிறந்த மண் புணே. இங்கு பாஜகவின் மாநில மாநாடு நடப்பது கூடுதல் சிறப்பானது.