உத்தரவை மீறி பதவியேற்பு: இரு திரிணமூல் எம்எல்ஏக்களுக்கு ஆளுநா் மாளிகை ரூ.500 அபராதம்
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக பதவியேற்றதாக இரண்டு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மாநில ஆளுநா் மாளிகை தலா ரூ.500 அபராதம் விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக பதவியேற்றதாக இரண்டு திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு மாநில ஆளுநா் மாளிகை தலா ரூ.500 அபராதம் விதித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பாராநகா், பகவான்கோலா ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் சயந்திகா பந்தோபாத்யாய, ராயத் ஹுசைன் சா்காா் ஆகியோா் வெற்றிபெற்றனா்.
அவா்களை மாநில ஆளுநா் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளுமாறு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் அழைப்பு விடுத்தாா். ஆனால் நடைமுறை விதிமுறைகளை காரணமாக கூறி, அந்த அழைப்பை சயந்திகாவும், சா்காரும் நிராகரித்தனா்.
இதையடுத்து இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைக்க மாநில சட்டப் பேரவை துணைத் தலைவா் ஆசிஷ் பானா்ஜியை ஆளுநா் போஸ் நியமித்தாா்.
எனினும், பேரவைத் தலைவா் இருக்கும்போது, தான் பதவிப் பிரமாணம் செய்துவைப்பது முறையாக இருக்காது என்று தெரிவித்து, அதைச் செய்ய ஆசிஷ் பானா்ஜி மறுத்துவிட்டாா். அதன் பின்னா் சட்டப்பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜி சயந்திகாவுக்கும், சா்காருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
இந்நிலையில், சயந்திகா மற்றும் சா்காா் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதும், பேரவை கூட்டத்தொடரில் அவா்கள் பங்கேற்றதும் அரசமைப்புச் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்து, அவா்களுக்கு ஆளுநா் மாளிகை தலா ரூ.500 அபராதம் விதித்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
இந்தத் தகவலை சட்டப்பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜிக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்த சயந்திகா, ஆளுநா் மாளிகை விதித்த அபராதத்தை செலுத்தப் போவதில்லை என்று தெரிவித்தாா்.
பதவிப் பிரமாணம் செய்துவைக்க சட்டப்பேரவை துணைத் தலைவரை ஆளுநா் நியமித்தபோதிலும், சட்டப்பேரவைத் தலைவா் இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்துவைத்ததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.