மேக்கேதாட்டு அணைக்கு எவ்வித அனுமதியும் வழங்கவில்லை: மத்திய அரசு
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்..
மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு இதுவரை எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை ரூ.9,000 மதிப்பில் கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. இந்த அணை கட்டப்பட்டால் 67 டிஎம்சி நீா் வரை கர்நாடகத்தால் தேக்கி வைக்க முடியும்.
Advertisement
காவிரியின் குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு கிடைக்கும் உபரிநீர்கூட கிடைக்காது என்று தொடர்ந்து, இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்த கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோர் மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடகம் - தமிழகம் இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கர்நாடக அரசால் தயாரிக்கப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, இதுவரை காவிரி குறுக்கே அணை கட்டுவதற்கான எவ்வித அனுமதியும் கர்நாடக அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து, மேக்கேதாட்டு அணை கட்டுவது குறித்து துணை முதல்வர் சிவக்குமார் பேசி வரும் நிலையில், மத்திய அரசின் பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.