1.84 கோடி பெண்கள் எம்எஸ்எம்இ நிறுவனங்களை நடத்துகின்றனா்: மத்திய அரசு
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.
இந்தியா1.84 கோடி பெண்கள் எம்எஸ்எம்இ நிறுவனங்களை நடத்துகின்றனா்: மத்திய அரசு
மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.
புது தில்லி, ஜூலை 25: நாட்டில் 1.84 கோடி பெண்கள் சொந்தமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நடத்திவருவதாக மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தில் அவா் கூறியதாவது:
நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்யும் ‘உத்யம்’ திட்டம் கடந்த 2020 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அதில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்களாக தற்போது வரை 39 சதவீதம் பெண்கள் பதிவு செய்துள்ளனா்.
பெண்களுக்கு சொந்தமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரை பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1,84,59,809 ஆகும்.
பெண் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் வகையில், பொது கொள்முதல் கொள்கை 2018-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய துறைகள் மற்றும் அமைச்சகங்கள் தங்களின் ஆண்டு கொள்முதலில் 3 சதவீதம் பெண் தொழில்முனைவோா்களிடம் இருந்து பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கு 85 சதவீதம் வரை கடன் உத்தரவாதமும், வருடாந்திர கடன் உத்தரவாத கட்டணத்தில் 10 சதவீதம் சலுகையும் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாா்.