ஒருநாள் ஆசிரியரான குடியரசுத் தலைவர் முர்மு!
காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடினார்.
திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராகப் பதவியேற்று இரண்டாண்டுகள் நிறைவுசெய்த நிலையில், ஒருநாள் ஆசிரியராகப் பொறுப்பேற்று மாணவர்களுடன் உரையாடினார்.
நாட்டின் குடியரசுத் தலைவராக மூன்றாம் ஆண்டில் திரௌபதி முர்மு அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுடன் திரௌபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக மாறி கலந்துரையாடினார்.
Advertisement
மாணவர்களுடனான உரையாடலில், இன்றைய மாணவர்கள் திறமைசாலிகள் என்பதால் உங்களிடம் பேச வேண்டும் எனக் கடந்த பல நாள்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களைப் பற்றியும் கேட்டறிந்தார். அவர்கள் விஞ்ஞானிகளாகவும், மருத்துவர்களாகவும் ஆக விரும்புகிறார்கள் என்பதைக் கேட்ட பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடினார். நீர், பாதுகாப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள் மற்றும் மரங்கள் அனைத்தும் அதன் தாக்கத்தை உணர்கின்றனர். புவி வெப்பமடைதல் காரணமாக, நாட்டின் சில பகுதிகள் வறட்சியை எதிர்கொள்கின்றன. எனவே, தண்ணீரைச் சேமிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். தண்ணீர் வீணாவதைக் குறைத்துப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரைச் சேமிக்க மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை உருவாக்க வேண்டும்.
மாணவர்களான உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.