நீதி ஆயோக் கூட்டத்தில் மம்தாவின் மைக் துண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ``ஒரு முதல்வரை நடத்தும் முறை இதுதானா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த அங்கம் என்பதையும், எதிரிகளாக கருதப்படக்கூடாது என்பதையும் மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தில் மம்தா, ``மத்திய பட்ஜெட் ஒருதலைபட்சமாகவும், பாரபட்சமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது; மத்திய அரசு இவ்வாறு பாரபட்சமாக நடந்துகொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்று மம்தா கூறியுள்ளார்.
மேலும், ``எனக்கு முன்பு பேசிய முதல்வர்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினார்கள். ஆனால், நான் ஐந்து நிமிடம் கூட பேசவில்லை. அதற்குள் எனது மைக் துண்டிக்கப்பட்டது.
எதிர்க்கட்சி தரப்பிலிருந்து பங்கேற்ற ஒரே முதல்வர் நான்தான். ஆனால், என்னையும் பேசக்கூட அனுமதிக்கவில்லை. இது மிகப்பெரிய அவமானம்’’ என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நீதி ஆயோக் கூட்டத்தின் பாதியிலேயே மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதாகக் கூறி, நீதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநில முதல்வா்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
தில்லி ஆம் ஆத்மி அரசும் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.