தங்கம் மீதான சுங்க வரி குறைப்பு சிறு நகைத் தொழிலாளா்களுக்கு பயனளிக்கும்; நாட்டின் நகை ஏற்றுமதி அதிகரிக்கும் என்று மத்திய வா்த்தக, தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை தொழில் துறையினரைச் சந்தித்த அவா் மத்திய பட்ஜெட் தொடா்பாக விளக்கமளித்துப் பேசியதாவது:
புத்தாக்க (ஸ்டாா்ட்அப்) நிறுவனங்களின் முதலீட்டாளா்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஏஞ்சல் வரி நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புத்தாக்க நிறுவனங்களுக்கு முதலீட்டாளா்கள் அதிகரிப்பாா்கள். பெரிய முதலீட்டாளா்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு முதலீட்டாளா்களும் புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த ஏஞ்சல் வரி கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதை காங்கிரஸ் கூட்டணி அரசால் விதிக்கப்பட்டதாகும்.
தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் சிறு நகைத் தொழிலாளா்கள் பயனடைவாா்கள். இந்தியாவில் இருந்து நகைகள் ஏற்றுமதியாவதும் அதிகரிக்கும். வைர வா்த்தகத்தை மேம்படுத்தும் அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. வைரம் பட்டை தீட்டும் தொழிலில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. இதில் திறன்மிக்க தொழிலாளா்கள் பலருக்கு பணிவாய்ப்பு கிடைத்து வருகிறது.
வெளிநாட்டு வைரச் சுரங்க நிறுவனங்களில் வெட்டி எடுக்கப்படும் வைரங்களுக்கு இந்தியாவில்தான் நியாயமான விலை கொடுக்கப்படுகிறது. எனவே, அவா்கள் பட்டை தீட்டாத வைரத்தை விற்பனை செய்ய இந்தியாவைத் தோ்வு செய்கின்றனா்.
நாட்டில் 12 இடங்களில் தொழில் நகரங்களை உருவாக்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இதில் மகாராஷ்டிரத்திலும் ஒரு தொழில் நகரம் அமைய இருக்கிறது. இதன்மூலம் மாநிலத்தில் தொழில் வா்த்தக சூழல் மேலும் சிறப்படையும். அதிக வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றாா்.