வயநாடு நிலச்சரிவு, கனமழை எச்சரிக்கை: கேரள சுற்றுலா தளங்கள் மூடல்
வயநாடு நிலச்சரிவு, கனமழை எச்சரிக்கை காரணமாக கேரள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரிட்ட நிலச்சரிவு மற்றும் இன்னும் ஓரிரு நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்பட்டன.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சூரல் மலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 45 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், கோட்டயம், வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், இடுக்கி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Advertisement
இதற்கிடையே, கேரளத்தில் பருமழை காரணமாக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கன்னூர் மற்றும் காசர்காடு மாவட்டங்களுக்கு இன்று மிகக் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வயநாடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமக 298 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இதன் காணமாக பல பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதில், இன்று அதிகாலை வீடுகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கி 45 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.