கேரளத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் மலைப் பிரதேசமான வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி இரு குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மண்ணுக்கடியில் புதைந்துள்ளவர்களை மீட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், வயநாடு முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி இந்த அசம்பாவிதத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், வயநாட்டின் மேப்பாடியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலச்சரிவு சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாய் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் விரைவில் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என தான் நம்புவதாகவும், கேரள முதல்வருடனும், வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் தான் தொடர்புகொண்டு பேசியுள்ளதகவும், தேவைப்படும் உதவிகளைப் பெற தங்களைத் தொடர்புகொள்ள தான் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்களுடன் பேசி அனைத்துவித உதவிகளையும் செய்ய கேட்டுக்கொள்வதாகவும், காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகளில் தேவைப்படும் உதவிகளை செய்யுமாறும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.