கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக இன்று நடைபெறவிருந்த அனைத்து மாநில அரசு பொது நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்க அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி,
ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் வயநாடு மாவட்டம், வைத்திரி தாலுகாவில் உள்ள மேப்பாடி பஞ்சாயத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 45 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலச்சரிவுகளில் சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர்.
மக்களை மீட்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களின் உடல்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு என்டிஆர்எப் மற்றும் தற்காப்புக் குழுக்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படைக் குழுவும் விரைவில் அங்குச் சென்றடைய உள்ளது. அட்டமலையிலிருந்து முண்டகை பகுதியைச் சென்றடைவதற்கான ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக ஜார்ஜ் கூறினார்.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணிகள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக வயநாடுக்கு ராணுவப் பொறியியல் குழு அவசரமாக அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் மாவட்ட நிர்வாகத்தால் சிறப்புக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். மாநில காவல்துறைத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. எனவே 9497900402, 0471 2721566.ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கேரளத்தில் நடைபெறவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.