சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!
16வது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
சிக்கிமின் 16வது ஆளுநராக பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஸ்வநாத் சோமாத்தர் அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அஸ்ஸாம் ஆளுநராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 72 வயதான மாத்தூர் சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ளார்.
Advertisement
இந்த விழாவில் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜகவின் மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் செவ்வாய்க்கிழமை சிக்கிம் வந்தடைந்தார். அவருக்கு ஆளுநராக நியமனம் செய்வதற்கான கடிதத்தை ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலாளர் வி.பி. பதக் நேற்று வழங்கினார்.
இந்திய- திபெத்திய எல்லைக் காவலின் 13 வது பட்டாலியன் அவருக்கு மரியாதை அளித்தது.
மாத்தூர் பாஜகவில் சேருவதற்கு முன்பு ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ் பேச்சாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் மாநில பாஜக தலைவராகவும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.