கேஜரிவாலுக்கு ஜாமீன் மறுப்பு! ஜூன் 19 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் ஜாமீன் மனு
உடல் நிலையை கருத்தில்கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி நீதிமன்றம் இன்று (ஜூன் 5) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி, இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜரிவால் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை சிறப்பு நீதிபதி காவேரி பஜ்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற காவலில் உள்ளதால் திகார் சிறை அதிகாரிகள் கேஜரிவாலின் மருத்துவ தேவையை கவனித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், அவருக்கு ஏற்கெனவே ஜூன் 5ஆம் தேதி வரை வழங்கப்பட்டிருந்த நீதிமன்ற காவலை ஜூன் 19ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும் கேஜரிவால் ஜாமீன் கோரிய மற்றொரு மனுவின் மீதான விசாரணையை வரும் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தில்லி மதுபான (கலால்) கொள்கை ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
தேர்தலையொட்டி பிரசாரத்துக்காக 21 நாள்கள் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் பிரசாரம் முடிந்து ஜூன் 2ஆம் தேதி மீண்டும் திகார் சிறையில் சரணடைந்தார்.