புது தில்லி: நாட்டுக்கு மிகச் சரியான நேரத்தில் கிடைத்த சரியான தலைவர் நரேந்திர மோடி என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு புழாராம் சூட்டியுள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய எம்.பி.க்கள் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று நடைபெற்றது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பி.க்கள் குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், ஜூன் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவிருப்பதாக பாஜக தலைவர் பிரகலாத் ஜோஷி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்த கூட்டத்த்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, நரேந்திர மோடியின் எதிர்காலப் பார்வை, நோக்கம், அதனை செயல்படுத்தும் விதம் அனைத்தும் மிகவும் நேர்த்தியானது. உண்மையான உத்வேகத்துடன் அவர் அனைத்து கொள்கைகளையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார். இன்றைய நிலையில், நாட்டுக்கு மிகச் சரியான நேரத்தில் கிடைத்த மிகச் சரியான தலைவர் நரேந்திர மோடி. இது நாட்டுக்குக் கிடைத்த மிகக் சிறந்த வாய்ப்பு. இப்போது நாம் இதனை தவறவிட்டுவிட்டால், எப்போதும் இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்காது என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தனது ஆதரவு எம்.பி.க்களின் பட்டியலை வழங்கி, ஆட்சியமைக்க உரிமைகோரவிருக்கிறார்.
மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், மத்தியில் கூட்டணி அரசை அக்கட்சி அமைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.