அஸ்ஸாமில் உள்ள கச்சார் மாவட்டத்தில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 1.7 கிலோ ஹெராயின் எனப்படும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கச்சார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹத்தா கூறுகையில், “அஸ்ஸாம்-மிஸோரம் எல்லையில் தோலாய் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தோலைக்கால் எல்லை புறக் காவல் நிலையம் அருகே தோலைக்கால் பகுதியில் கச்சார் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த அப்துல் அஹத் லஸ்கர் (33) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து சோப்பு வடிவிலான 1.7 கிலோ எடையுள்ள 139 ஹெராயின் பாக்கெட்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்” என்றார்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச மதிப்பு ரூ.8.5 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பாராட்டு தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிடுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், ”போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையில், கச்சார் காவல்துறையினர் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தலை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். சர்வதேச சந்தையில் ரூ.8.5 கோடி மதிப்பிலான சட்டவிரோத பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். போதைப் பொருளை கைப்பற்றிய காவல்துறையினருக்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதமும் அஸ்ஸாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.