பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் இந்தியா வருகை தந்துள்ளார்.
பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா். தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்யவிருக்கிறாா்.
அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.
பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் இன்று காலை இந்தியா வருகை தந்துள்ளார். தலைநகர் தில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் பவன் கபூர் வரவேற்றார்.
மாலத்தீவில் இருந்து இந்திய வீரா்களை திரும்பப் பெறுமாறு, சீன ஆதரவாளரான அந்த நாட்டின் புதிய அதிபா் முகமது மூயிஸ் இந்திய அரசிடம் அறிவுறுத்தினாா். இதனால், இருநாடுகளுக்கும் இடையே ராஜிய உறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.