தெலுங்கு தேசத்தில் ஒரு அமைச்சரும், ஒரு இணையமைச்சரும்
தெலுங்கு தேசத்திற்கு ஒரு அமைச்சரும், ஒரு இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடுக்கு விமானப் போக்குவரத்துத் துறையும் மற்றும் சந்திரசேகர் பெம்மாசானிக்கு தகவல் தொடர்பு மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசத்தின் ராம் மோகன் நாயுடு ஸ்ரீகாகுளம் தொகுதியிலும், சந்திரசேகர் பெம்மாசானி குண்டூர் தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தனர்.
ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 11 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆந்திரத்தை ஆட்சி செய்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.
மேலும், மக்களவைத் தொகுதிகளிலும் 16 இடங்களை கைப்பற்றியுள்ள சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைய முக்கிய கூட்டணிக் கட்சியாக உருவெடுத்துள்ளார்.