ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான்: நொய்டாவில் பரபரப்பு
நொய்டாவில் ஆன்லைனில் வாங்கிய அமுல் ஐஸ்கிரீமில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த தீபா தேவி தனது 5 வயது மகனுக்கு மாம்பழ மில்க் ஷேக் செய்வதற்காக ஆன்லைன் டெலிவரி தளத்தில் அமுல் ஐஸ்கிரீமை நேற்று ஆர்டர் செய்திருக்கிறார். ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டதும் அதனை அவர் திறந்து பார்த்துள்ளார். அதில் ஐஸ்கிரீமுடன் உறைந்திருந்த பூரானைக் கண்டு தீபா தேவி அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே இதுகுறித்த ஆன்லைன் டெலிவரி தளத்திடம் அவர் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட ஆன்லைன் டெலிவரி தளம், அமுல் தரப்பின் பிரதிநிதி இந்த பிரச்னையை தீர்ப்பர் என்று உறுதியளித்திருக்கிறது. அத்துடன் ஐஸ்கிரீமிற்கான தொகையையும் தீபாவிடம் திருப்பி அளித்துள்ளது. இருப்பினும் அமுல் நிறுவனத்திடமிருந்து தனக்கு எந்த தொடர்பும் வரவில்லை என்று தீபா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பான விடியோவை தனது இணையதளப் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த விடியோ இணயைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே ஐஸ்கிரீமில் மனித விரல் கண்டறியப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்த விடியோயும் இணயைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.