நீட் முறைகேடு: என்டிஏ, மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
நீட் தேர்வில் தவறு நடந்தால் அதை மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், நீட் தேர்வை நடத்துவதில் அலட்சியப்போக்கு இல்லாமல் முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நடந்த முடிந்த மருத்துவப் படிப்புக்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜூன்18) விசாரணைக்கு வந்தது.
நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் அலட்சியம் இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும் என்று நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்விஎன் பட்டி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச், மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆஜரான வழக்குரைஞர்களிடம் இதைக் கூறியது.
மே 5ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் உள்பட குறைகளை எழுப்பிய இரண்டு தனித்தனி மனுக்களை பெஞ்ச் விசாரித்தது.
நீட் தேர்வுக்கு மாணவர்கள் கடுமையாக உழைப்பது பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி மருத்துவராகும்போது, சமூகத்திற்கு மிகவும் தீங்காக முடிகிறது. எனவே தேர்வு நடத்தும் பொறுப்பை ஏற்பவர்கள் இதைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
நீட் தேர்வில் தவறு நடந்தால் அதை மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், தேர்வைப் புதிதாக நடத்த உத்தரவு கோரியவை உள்பட நிலுவையில் உள்ள பிற மனுக்களும் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் கூறியது. மேலும் நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.