முன்பு எரிபொருள்; இப்போது தண்ணீர் கட்டணம்: பெங்களூரு சந்திக்கும் விலை உயர்வுகள் ஏன்?
பெங்களூருவில் தண்ணீர் கட்டண உயர்வு? காங்கிரஸ் அரசின் முடிவு என்ன..
கர்நாடகத்தில் எரிபொருள் விலை உயர்வையடுத்து காங்கிரஸ் அரசு பெங்களூரு நகரத்தில் தண்ணீர் கட்டணத்தை உயர்த்த ஆலோசித்துவருகிறது.
துணை முதல்வர் டி.கே.ஷிவகுமார், கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் தங்களுக்கு வேறு வழி இல்லையெனவும் புதன்கிழமை பேசியுள்ளார்.
இதுதொடர்பாக ஷிவகுமார் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:
நாங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகிறோம். புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெங்களூரு குடிநீர் பகிர்மானம் மற்றும் கழிவு அகற்ற வாரியத்துக்கு எந்த வங்கியும் பொருளாதார ஆதரவு அளிக்க முன்வரவில்லை.
10 முதல் 15 நாள்களில் காவேரி திட்டத்தின் 5-வது கட்டம் முடிவடைந்துவிடும். தண்ணீருக்கு செலவாவதில் 70 சதவிகிதம் மின்சாரம் மற்றும் தொழிலாளர் கூலிக்கு செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. ஆகவே வேறு வழியில்லை. வாரியத்தை நிலைநிறுத்த சாத்தியமானவற்றை முயற்சித்து வருகிறோம்.
உலக வங்கிகளும் பொருளாதார ஆணையங்களும் நாங்கள் இந்த சிக்கலை எதிர்கொள்வதில் அரசியல் செய்வதாக தெரிவிக்கிறார்கள். ஆனால் இதனை தீர்க்க முயற்சிக்கவில்லை.
நீர் பகிர்மான அமைப்பை விரிவாக்க வேண்டும். ஆறு டிஎம்சி நீர் பெங்களூருவுக்கு திறக்க ஆணையிட்டுள்ளேன். இன்னொரு கட்டப் பணியும் மீதமுள்ளது. பெங்களூரு குடிநீர் வாரியம் தனி நிறுவனம் எனவும் அது சார்பற்று செயல்படுவதை காட்டவும் வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீருக்கான கட்டண உயர்வு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.