கேரள கோயிலுக்கு இயந்திர யானை: ‘பீட்டா’, நடிகை அதா ஷர்மா வழங்கினா்!
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு நடிகை அதா ஷர்மா, இயந்திர யானை ஒன்றை வழங்கியுள்ளார்.
கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கனூரில் பௌர்ணமிகவி அம்மன் கோயிலுக்கு பீட்டா நிறுவனமும், நடிகை அதா ஷர்மாவும் இணைந்து இயந்திர யானை ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து பீட்டா அவசர மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுட்டி ராஜீவ் கூறுகையில், “பீட்டா இந்தியா மற்றும் இந்தி, தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் பிரபலமான நடிகை அடா ஷர்மா ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.
கேரளத்தில் யானைகள் மதவழிபாடுகளுக்காக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கேரளத்தில் ஒவ்வொரு ஆண்டும் யானைகள் மதம்பிடித்து ஓடுவது மிகவும் பொதுவானது.
பாரம்பரிய பணிக்குழு அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மதவழிபாடுகளின் போது 526 பேர் யானைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதையெல்லாம் சரி செய்யத்தான் இந்த இயந்திர யானையை அறிமுகப்படுத்தினோம்.
கேரளத்தில் இது மூன்றாவது இயந்திர யானையாகும். எந்த கோயில்களுக்கு இந்த வகையான யானைகளை தானமாக வழங்குகிறோமோ, எதிர்காலத்தில் அவர்கள் உயிருள்ள யானைகளை பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளனர்” என்றார்.
இது தொடர்பாக பீட்டா இந்தியா நிறுவனத்தினர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதா ஷர்மாவுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளனர்.