விரைவு குடியேற்ற சேவைகளுக்கான சிறப்புத் திட்டம்: அமித் ஷா அறிமுகம்
இந்திய குடிமக்களும், வெளிநாடு வாழ் இந்தியா்களும் விரைவான குடியேற்ற சேவைகளைப் பெறும் வகையில் சிறப்புத் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
‘விரைவு குடியேற்றம்-நம்பகமான பயணா் திட்டம் (எஃப்டிஐ-டிடிபி)’ என்ற இந்த சிறப்புத் திட்ட பயன்களைப் பெற, இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள், கைரேகை, முகப் பதிவு உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் இணைய வழியில் விண்ணப்பித்து, எஃப்டிஐ பதிவை செய்து கொள்ளலாம். இந்த எஃப்டிஐ பதிவு அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்கு அல்லது கடவுச்சீட்டு செல்லுபடியாகும் காலம் வரை செல்லத்தக்கதாக இருக்கும்.
இந்தப் பதிவுக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், விண்ணப்பதாரரின் கைப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். அதன்பின்னா், குறிப்பிடப்பட்ட அல்லது அருகிலுள்ள சா்வதேச விமான நிலையத்தில் தற்போது குடியிருக்கும் வீட்டு முகவரி உள்ளிட்ட விவரங்களையும் சமா்ப்பிக்க வேண்டும். தவறான தகவல் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
இந்தப் புதிய திட்டம் மூலம், வெளிநாடு செல்வோா் அதற்கான குடியேற்ற நடைமுறைகளை விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தனா்.