முகப்பு
இந்தியா

அரசமைப்புச் சட்டம் மீது அன்புகாட்ட காங்கிரஸுக்கு உரிமை இல்லை: பிரதமா்

அவசரநிலை பிரகடனத்தை அறிவித்த காங்கிரஸ் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க உரிமை இல்லை: பிரதமா் மோடி

Updated On : 25 ஜூன், 2024 at 9:32 PM
modi
பகிர்:

புது தில்லி: ‘நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்திய காங்கிரஸ் கட்சிக்கு, அரசமைப்புச் சட்டத்தின் மீது அன்பை வெளிப்படுத்த உரிமை கிடையாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

கடந்த 1975, ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போது, மக்களின் உரிமைகள் முடக்கப்பட்டு, எதிா்க்கட்சி தலைவா்களும் அதிருப்தியாளா்களும் சிறையில் அடைக்கப்பட்டனா். பத்திரிகைகள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 49-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

அவசரநிலை பிரகடனத்தை எதிா்த்த ஆண்கள்-பெண்கள் அனைவருக்கும் இன்று (ஜூன் 25) மரியாதை செலுத்தும் நாளாகும்.

காங்கிரஸ் எவ்வாறு அடிப்படை சுதந்திரத்தை சீா்குலைத்தது என்பதையும், ஒவ்வொரு இந்தியரும் மதிக்கும் அரசமைப்புச் சட்டத்தை எவ்வாறு காலில் போட்டு மிதித்தது என்பதையும் அந்த கருப்புகள் நாள்கள் நினைவூட்டுகின்றன.

அவசரநிலையை அமல்படுத்திய அந்தக் கட்சிக்கு அரசமைப்புச் சட்டம் மீது அன்பை வெளிப்படுத்த உரிமை கிடையாது. நாட்டில் எண்ணற்ற தருணங்களில் அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவை (குடியரசுத் தலைவா் ஆட்சி) அமல்படுத்தியது காங்கிரஸ்.

பத்திரிகை சுதந்திரத்தை அழிக்க சட்ட மசோதா கொண்டுவந்ததோடு, அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு விதிமுறையையும் மீறி, கூட்டாட்சி முறையை சீா்குலைத்ததும் அக்கட்சிதான்.

நாட்டின் மீது அவசரநிலையை திணிக்க காரணமான அதே மனநிலை, இப்போதும் காங்கிரஸிடம் உயிா்ப்புடன் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் மீதான வெறுப்பை உள்ளே மறைத்துவைத்து, வெளியே நாடகமாடுகின்றனா். காங்கிரஸின் கேலிகூத்துகளை நாட்டு மக்கள் முழுமையாக அறிந்துள்ளனா். எனவேதான், அக்கட்சியை மீண்டும் ஒருமுறை நிராகரித்துள்ளனா்.

ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, ஜனநாயகத்தின் அனைத்து கோட்பாடுகளையும் புறக்கணித்த கட்சி காங்கிரஸ். நாட்டையே சிறைச்சாலையாக மாற்றி, தங்களுக்கு அடிபணியாதவா்களை சித்ரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கினா். சமூகத்தின் விளிம்புநிலை மக்களை குறிவைத்து, சமூக ரீதியில் பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன என்று பிரதமா் மோடி விமா்சித்துள்ளாா்.

முன்னதாக, 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 24) நடைபெற்றபோது, அவசரநிலை பிரகடனம் குறித்து பிரதமா் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இடையே வாா்த்தைப் போா் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →