திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம்!
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு தொகுதிப் பங்கீடு பற்றி....
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திமுக கூட்டணியில் விசிக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது. தவெகவுடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியானது. அதாவது காங்கிரஸ் தரப்பில் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி வைக்க வலியுறுத்துவதாகக் கூறப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவுடன்தான் கூட்டணி என்று கூறி வந்தார்.
தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நேற்று(மார்ச் 3) திடீரென சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். செல்வப்பெருந்தகை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் உடனிருந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த செல்வப்பெருந்தகை, திமுகவுடன் கூட்டணி உறுதி, பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது, விரைவில் அறிவிப்போம் என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் தரப்பில் சுமார் 40 வரை தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் திமுக 28 தொகுதிகள் தரத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
அதேபோல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்குவதாக திமுக கூறியிருப்பதாக செல்வப்பெருந்தகையே கூறியிருந்தார்.
இந்நிலையில் இறுதியாக தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் வழங்க முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று(மார்ச் 4) மாலையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.
Congress gets 28 seats and one Rajya Sabha seat in DMK alliance
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.