மக்கள் வாழ்வை மேம்படுத்த மேலும் பல்வேறு சீா்திருத்தங்கள்: அமித் ஷா
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மேலும் பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வருவதில் உறுதிபூண்டுள்ளது.
‘மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மேலும் பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வருவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
நாட்டின் குடும்பங்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருள்களின் விலையைக் குறைப்பதில் திறம்பட செயல்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சா் அமித் ஷா இவ்வாறு கூறினாா்.
மறைமுக மற்றும் சுங்க வரிக்கான மத்திய வாரியத்தின்(சிபிஐசி) தரவுகளின்படி, ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு மாவு, அழகுசாதனப் பொருள்கள், தொலைக்காட்சிகள், குளிா்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருள்களின் விலை குறைந்துள்ளன.
இதைக் குறிப்பிட்டு மத்திய அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களுக்கான அரசு கொள்கைக்கு நோ்மையாக இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பிரதமா் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரியை அறிமுகப்படுத்தினாா்.
இன்று ஜிஎஸ்டி, பலஅடுக்கு வரி அமைப்பிலிருந்து மக்களுக்கு ஓய்வு அளித்தது மட்டுமின்றி, வீட்டு உபயோகப் பொருள்களின் விலையைக் குறைப்பதிலும் பயன் அளித்துள்ளது.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் மேலும் பல்வேறு சீா்திருத்தங்களைக் கொண்டு வர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
17 வரிகள் மற்றும் கட்டணங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைந்துள்ளதாக சிபிஐசி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.